காணாமல் போனவர்கள் வட்டுவாய்க்கால் விகாரையின் கீழ் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



"2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கட்டப்பட்டுள்ள விகாரையின் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று  (01) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் கட்டப்பட்டுள்ள விகாரையின் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக பலரும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

ஆகையால் விகாரையை அகற்றி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதன் மூலமாகவோ அல்லது நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் ஆய்வு செய்து உண்மையை வெளிக்கொணர அரசாங்கம் முன்வர வேண்டும்" என்று நீதி அமைச்சகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

"காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் சொல்வது உண்மை, உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. போர் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை குறிப்பாக கணவனை மனைவியும், மகனை மகளை பெற்றோரும் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் முன்பு ஒப்படைத்தனர். தடுப்பு முகாம்கள் கடல் எனப் பல இடங்களிலும் சரணடைந்தனர்.

வட்டுவாகலில் ஒப்படைக்கப்பட்டவர்கள் கொக்குத்தொடுவாய் நோக்கியும், கேப்பாப்புலவு நோக்கியும், வட்டுவாகல் கடற்கரை நோக்கியும் பேருந்துகளில் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இலங்கை ராணுவத்தினரிடம் ஒப்படைத்தோம். இன்னும் காணவில்லை அவர்கள் எங்கே என்று தேடுகிறார்கள். நீதி அமைச்சரே நீதி தாருங்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.

வட்டுவாகல் கடற்கரைப் பாதை நோக்கி பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றவர்களை விட்டுவிட்டு பேருந்துகள் மட்டும் திரும்பி வந்ததாக மக்கள் சொல்கிறார்கள். வட்டுவாகல் தனித்தமிழ் சைவக்கிராமமாகும். பௌத்தர்கள் இல்லாத இடத்தில் ஒரு பெரிய விகாரை கட்டப்பட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்களைக் கொண்டு சென்று படுகொலை செய்து புதைத்துவிட்டு அதன்மேல் இவ்வாறு பெரிய விகாரையை இங்கு அமைத்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். உங்கள் மடியில் குற்றமில்லை என்றால் இதை நிரூபியுங்கள்.

விகாரையை அகற்றி ஆழமாக தோண்டுங்கள். அல்லது புதிய தொழில்நுட்ப முறையில் ஆழத்தில் இருப்பவற்றை அறியக்கூடிய நவீன கருவிகளைப் பயன்படுத்தி உண்மையை வெளிப்படுத்துங்கள்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கும் நீதி தாருங்கள். ஒருவேளை நீங்கள் நீதி தரும்போது நீதிபதி சரவணராஜா போலத்தான் உங்களுக்கும் நீதி கிடைக்குமோ தெரியாது. ஆனால் இன்றைய அரசை நம்புவோம். இந்த விடயங்களுக்கு நீதி தாருங்கள் என்று கேட்கின்றோம்" என்றார்."

Previous Post Next Post